Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Tuesday, December 24, 2013

வெளையாட்டுக்காரி.....................

வெளையாட்டுக்காரி………..
·         அடியே !
வெளையாட்டுக்காரி…
ஒருநாள்
பள்ளிக்கூடம் விட்ட
ஒரு வெள்ளிக்கிழமையில்
ஓர் ஒப்பந்தம் போட்டாய்
நாளை விளையாடுவதென..

·         கருக்கல் கழியுமுன்னே
பாவாடை தடுக்கிவிழ
விளையாட வாவென்று
கூவி அழைத்த
அந்த அறியாப்பேதை
இன்று எங்கே?
அலைபாயும் மனசு..

·         கண்களைக் கட்டி
என்னெதிரே நின்றுகொண்டு
கண்டுபிடி,கண்டுபிடியெனக்
கத்திய உன் குரலைக் கேட்டு
உன்னைக் கைகளால்
கட்டிப் பிடித்ததென் பாவமா?
இப்போ கண் விழித்துக்
காத்திருக்கேன்,
காததூரம் வரை
உன்னைக் காணலியே!

·         வெளையாட்டுக்காரியே !
இப்படியான
நம் உறவில்
விதியொன்று வெளையாடிப்
போனதால்
நீ பெரிய மனுசியானாய்.
என் உறவுகளின்
சதி சதுராடியது
நான் ஏழை என்பதால்.
அன்புக்கு முன்னே
சதியாவது,
விதியாவது,
இது இந்த ஊமையின்
மொழியாகிப் போனது.

·         ஓடிப் பிடித்து விளையாடுவது
உனக்குப்
பிடித்தமான ஒன்று.
அதனால்தான்
ஊருறங்குகையில்
உனக்குப் பிடித்தமானவனுடன்
ஓடிப் போனாயென
ஊர்கூடிப் பேசுதடி.
அதை ஏற்க மறுத்த
என் மனசோ நினைக்கிறது
இது
உனக்குப் பிடித்தமான
பதுங்குமூஞ்சி
விளையாட்டென்று.

·         நீ! விபரமறியாப் பேதையடி
கோட்டான் கோட்டான்
ஆத்துல ஒரு மீன் புடிச்சேன்னு
பாட்டொன்னு பாடி
நீ குளத்திலல்லவா
மூழ்கி எழுந்தாய்.
இன்றோ என்னை
ஒரேயடியாய் தலைமுழுகினாய்,.

·         அன்று
ஆபியம்,மணியாபியம்
என்று
என்னைக் குனியச் சொல்லிப்
தாண்டியவளே!
இன்று,
என்னைத் தலைகுனிய வைத்து
என் அன்புக்கோட்டையை
ஏனடி தாண்டினாய்?

·         என்னை
ராசா வேசம் போடச் சொல்லி
வீரபாண்டியக்கட்டபொம்மன் போல
கரியைக் குழைத்தெடுத்து
கண்ணத்துல வரைஞ்சியே
மீசை ஒன்னு,
இன்று,
என் முகமெல்லாம் கரியாக
நீ செய்த
காரியமென்னடி?

·         களத்துமேட்டு நடுவுல
கையக்கட்டி உக்காரவெச்சு
கானக்குயிலு போல
கட்டைக் குரலெழுப்பிப்
பாடுனியே ஒரு பாட்டு.
காலம் பல கடந்தாலும்
பாழும் நெஞ்சுக்குள்ளே
இன்னும் வாழுமடி.
இன்னிக்கு
ஊர்கூடி என்னப் பார்த்து
கைகொட்டிப் பாடுதடி
ஒரு பாட்டு,
அடி பாதகத்தி!
எம்மனசு போடுதடி
கூப்பாடு.

·         அப்பா,அம்மான்னு
ஒரு வெளையாட்டு
இருப்பதாய்
அறியாத ,புரியாத
ஆரம்ப வயசுல
எனக்குச் சொல்லிச் சொல்லிப்
போனவளே,
கடைசிவரை நீ
என்ன ஆனன்னு
எனக்கும் தெரியலடி
உன் நினைப்பில்
உயிர் வாழும்
நானின்னும்
அப்பாவா ஆகலடி…


·         சுனாமி வந்தமர்ந்து
கொலுவிருந்து போன
ஒரு தனித்தீவாய்
நான் இருக்கேன்.
ஒரு
நூறாங்குச்சி
வெளையாட்டுப்போல
என் வாழ்க்கையை
சிக்கலாக்கிப் போட்டியே,,


·         அடைமழைப் பெய்து முடிந்த
ஒரு நாள் மாலையில்
சில்லு விளையாடுவதாய்
பூமியின் நெஞ்சைக்
கீறிப் பிளந்து
கட்டம் கட்டமாய்
கோடுகளைக் கிழித்தாய்
ஒரு சோதிடக்காரன் போல்.
சில்லு விட்டெறிந்து
கண்களை மூடி
ஒரு கையால்
பாவாடையைச் சற்று
மேல் தூக்கிப் பிடித்து
பாதங்களை மெல்ல
எடுத்து வைத்தாய்
ரைட்டா ரைட்டா என்று
அத்தனையும் தப்புத்தப்பாய்.
இன்றும் அதுதானா…?

·         தீப்பெட்டியில் நூலைக்கட்டி
ஒரு முனையில் நீயும்
மறு முனையில் நானும்
அலோ,அலோ சௌக்கியமா?
என்று கேட்டுக்கொண்டபோது
மனசுக்குள் அடைமழைதான்.
இன்றோ
உன்னைத் தொடர்பு கொள்ள
அத்தனையும் மொத்தமாய் இருந்தும்
எந்த எண்ணில் நீ
தொலைந்தாயடி?

·         இப்பொழுதெல்லாம்
கிராமங்களில்,
நீ விளையாடி ஓய்ந்த
விளையாட்டுக்களை
பிள்ளைகள் எவரும்
விளையாடுவதில்லை.
காலம் மாறிப் போச்சு.
அவரவர் வீடுகளில்
ஊடகங்கள் விளையாடப்
பக்குவாய்ப் பழகிவிட்டன.

·         நீ விளையாடிப் போன
தடயங்களாய்
இன்னும் நான்
இருக்கிறேன் மிச்சமாய்.
ஒரு தேவதை
வந்து போன தேசமாய்
இன்னும் குதூகலப்படுகிறது
நெஞ்சமே,

·         அடியே! வெளையாட்டுக்காரி,
செத்துச் செத்துப் பிழைக்கிற
வெளையாட்ட மட்டும்
நீ ! ஏனடி சொல்லித் தொலைக்கல?

·         கிழக்கில் உதிக்கிற
சூரியன் போல
ஒரு நாள்
வந்துதிக்க மாட்டாயா?
ஒரு தேவதைபோல!
நீ எங்கு சென்றாயென்ற
புதிரை விடுவிக்க மாட்டாயா?
ஒரு விடுகதை போல!
சீ.. போடி…
ஒன்னோட
நான் கா…………..