Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Tuesday, December 31, 2013

அம்மா ! நீ வருவாயா ...







   அம்மா !
நாங்கள்
ஊருக்கு வருகிறோம்
எனும் தொலைபேசி ஒலி
உனக்கு
மாதா கோயில்
மணியோசைதான்.

·        எங்களின்
வருகைச் செய்தி
உன்னுடைய
சுருங்கிப்போன
இரத்த நாளங்களில்
உருவாக்குமே
பெரும் ஆழிப் பேரலையை .

·        தோட்டம் துறவுகள்
தூய்மை பெறும்
துப்பட்டிகள்
நிறம் மாறும்.
தலையணைகள்
புது வண்ணம் பெறும்.

·        அடுக்களை
களைகட்டும்
அடிபம்பில்
சுத்த நீரூறும்.

·        கடைசி வீட்டு
நாட்டுக்கோழி முதல்
கசாப்புக்கடையின்
கறியாடுவரை
உன்னால்
உறுதிசெய்யப்பட்டிருக்கும்.

·        சிலவேளைகளில்
காய்கூட
கறியாய் ருசிக்கும்
கைப்பக்குவம்
உன்னுடையது.

·        அம்மா!
நீ வாழ்ந்து
எனைப் பெற்று வளர்த்த
வளமான மண்ணைத்
தொடும்போதெல்லாம்
உன் நெஞ்சைத் தொடும்
ஈரம் உணர்கிறேன்.

·        பயணிகள்
வருகையை எதிர்நோக்கும்
பேருந்து நிழற்குடையாய்
விடியலிலே
அமர்ந்திருப்பாயே
நீ என்னை
எதிர்பார்த்து.

·        பிள்ளைகளைக்
கண்டதும்
சூரிய  விடியல்
புலராத பொழுதிலும்
உன் முகத்தில் தெரியுமே
ஒரு ஒளி
            அதை வேறு எங்கேனும்
            கண்ட நினைவில்லை.

·        பிள்ளைகளை
இடுப்பில் சுமந்து
வெற்றி பெற்று
வீடு திரும்பும்
ஒரு போர்வீரனைப் போல்
பெருமிதமாய்
முன்னே செல்வாய்.
·        அம்மா !
நீ பாசத்தின் உவமை.
நான் உன்னிடம் கண்டது
பூமியின் பொறுமை.

·        உன்
வாழ்க்கைப் போரில்
சூறாவளிக்காற்றுச்
சுழன்று அடித்தபோதும்
சரி,
உறவுகள் உன்னை
எள்ளி
நகையாடிய போதும் சரி,
மனம்
கட்டுக்குலையாத
கட்டுமரமல்லவா நீ!

·        உன் உடம்பின்
தோற்சுருக்கம்
அனுபவங்களின்
பெருக்கம்.
அதை
அனுபவிக்கவோ
நீ சொல்லக் கேட்கவோ
ஆண்டுகள் பலவாகும்.

·        நீ தனிமரமான போது
செல்லரித்துப் போன
காகிதங்களும்
உளுத்துப் போன
குப்பைகளும்
புலம்பிய புலம்பல்களை
ஒரு புன்முறுவலால்
உதைத்துத் தள்ளிய
உன் உள்ள வலிமை
யாருக்கு வரும்?


·        நானறிந்து
உன் வாழ்வில்
தென்றல்
வந்து போனதாய்
வரலாறே இல்லையம்மா!

·        உன் முகத்தில்
சூழ்ந்த
சோகச் சுவடுகள்
என்றும்
அழிந்ததில்லையே!
நீ வாழ்ந்த காலத்தில்
வசந்தம் வீசிய
வாசத்தையேனும்
நுகர்ந்ததுண்டா அம்மா?


·        துக்கம் என்
தொண்டைக்குழியை
அடைக்கும் போதெல்லாம்
நீர் வார்ப்பது
உனது
நினைவலைகள் தான்.

·        நோய் நொடிகள்
அண்டாத
உன் தேகத்தைக்
என்னுடைய பாசமா
குலைத்தது?
நமக்குப் பின்
யார் கவனிப்பாரென்னும்
பேரப்பிள்ளைகளின்
கவலைகளா ?

·        ஊருக்கு
வந்த பொழுதெல்லாம்
கொம்பைத் தழுவும்
கொடி போல
என் மகள்
தென்றல் போல
உன்
கழுத்தைத்
தழுவிக் கிடப்பாளே!

·        நினைத்துக் கூடப்
பார்க்க முடியாத
தூரம் வரை நீ
தனியே சென்றது
ஏனம்மா?
நானும்
உன்போலத்
தனிமரமானது நியாயமா?
விடை சொல்ல
இங்கு யாருண்டு ?


·        இன்று
நீயில்லாத ஊரை
நினைத்துப் பார்க்கக் கூட
மனம் வரவில்லை.
நேரமுமில்லை.
காவிரி பாயாத
ஆற்றுப்படுகையாய்
உன் நினைவுகளும்
நீ உறங்கிப் போன
வருத்தங்களும்
கண்ணுக்குள்
நீர் வற்றிக் காய்கின்றன.

·        ஆற்றின் கரையோரமாய்
ஒரு வழிபோக்கன் போல
நான் வந்து செல்வது
கடமைக்காக அல்ல.
ஊரோரமாய்
நீ உறங்கிக் கொண்டிருக்கும்
உன் கல்லறையைத்
தரிசிப்பதற்காக.