Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Monday, May 19, 2014

நெ(வ)ஞ்சம் நிறைந்தவன்

நெ(வ)ஞ்சம் நிறைந்தவன்

கண்ணாளா !
நான்
பூப்பெய்திய நாள் தொடங்கி
எந்தச் சலனங்களுக்கும்
சம்மதிக்காத
என் நெஞ்சம்
உன்னைக் கண்ட
நாள் முதலாய்
பூத்துக் கிடந்தது
உன் நினைவுகளில் .

கண்களில் பதிந்த
உன் உருவத்தின்
காலடித்தடம் கேட்கக்
காத்துக் கிடந்தது
உன் வருகைகளில் .

நேரெதிர் நின்று
எவரிடமும்
பேசியறியாத நான்
உன் தாக்கும் விழி
எதிர்கொள்ள
ஆசைப்பட்டாலும்
சில வேளைகளில்
நிலை குலைந்து
போனதுண்டு
உன் நேசம் கண்ட
என் பெண்மை.

என் கரம்
இறுகப் பற்றி
வலம் வந்த போது தான்
உணர்ந்தேன்
உனது உரிமையை
மணமேடையில்.

அந்த  உரிமைதான்
என் வாழ்வை
வறிதாக்கியதோ ?
என் கனவுகளை
வற்றச் செய்ததோ?
கண்களைக் குளமாக்கியதோ ?

நீ
வார்த்தைகளைத் 
தேடித் தேடி
என்னை
வருணித்தபோதெல்லாம்
வசந்தம்
வந்துபோனதை
உணர்ந்தேன்.
இன்று உனக்கு
என்ன ஆயிற்று?
இன்று
உன் நாவிலிருந்து
விடுபடும்
ஒவ்வொரு சொற்களிலும்
ரத்த வாடை அடிக்கிறது.

எனைத்
தோள் சாய்த்து
ஆசையாய்த் தலைக்கோதி
அன்பாய் வருடியபோதெல்லாம்
உன் இதயத்தின்
வாசம் உணர்ந்தேன்.
இன்று
உன் விரல்கள் தோறும்
புலி நகங்கள்
முளைத்த
குரோதம் ஏனடா ?

தூங்குவதற்குத்
தூக்கணாங்குருவிக்கூடு
போதுமென்றேன்.
பெருங்கண்ணாடி மாளிகையில்
ஒரு பொன்வண்டாய்
என்னைக் குடியமர்த்தினாய்.
வண்ண மனம் பரப்பினாய்.
பேதை நான்
மயங்கித் தொலைத்தேன் .

உன்னால் செய்யப்பட்ட
வசதிகள் எல்லாம்
மீனுக்கு வீசிய
புழுக்கள் என்பதைச்
சற்றுக் காலம் தாழ்த்தியே
உணர்ந்தேன்,

ஏனெனின்,
என் அன்னை
எனக்கு
அம்புலியைக் காட்டி
அமுதூட்டியவள்.
இன்றும்
அதே அறியாமையில்.

அன்பனே !
ஆன்மா
வலியெடுக்கும்போதெல்லாம்
ஏனென்று கேட்டால்
எதிர்ப் பேச்சு என்கிறாய்.
ஊமையாய் நின்றால்
வாய்க் கொழுப்பு என்கிறாய்.
அகராதியில்
உனக்கு எல்லாம்
அத்துப்படி.யோ ?

அப்பொழுதெல்லாம்
நீ  வரும்பொழுது வரும்
வாசங்களிலெல்லாம்
பூக்களாய்ச் சூடினேன்.

இப்பொழுது
வாங்கி
வரும் பூக்களிலெல்லாம்
சாக்கடையின்
ஈக்கள்
மொய்ப்பதை உணர்கிறேன்.

ஐந்து விரல்களின்
அன்புக்கரங்களால்
தாங்கினாய்.
அதிசயித்துப் போனேன்.
அவை
ஆக்டோபஸ் ஆனதை
மெல்ல உணர்கிறேன்.

சிபிச் சக்கரவர்த்தியின்
நீதி மன்றத்தில்
உனக்குத் தரப்பட்ட
நியாயத் தராசில்
அம்போடு நின்று
நியாயம் பேசுபவனே?
புறாக்கள்
உனது உரிமையென்று
அகந்தையில் கூவுகிறாய் .

நண்பனே !
வாழ்க்கையில்
என்றேனும் கேட்டதுண்டா
மலரிதழ் திறக்கும்
ஓசையினை ?
எங்கேனும் நுகர்ந்ததுண்டா
இதழ் விரிந்து
மணம் வீசும் தென்றலை ?

மூச்சுக் குழல்வரை
மெல்ல உறிஞ்சினாயா
மண் முத்தமிட்ட
மழைத்துளியின்
வாசனையை ?
பாவம் .
நீ இயந்திரம் தானே !
உன்னால்
உருவாக்கப்பட்டக் காயங்கள்
உறங்காத குழந்தையாய்
அடிக்கடி
அடம் பிடிப்பதால்
விழித்துக் கிடக்கின்றன
நட்சத்திரங்கள் பூத்துச் சிரிக்கும்
என் அழகிய இரவுகள்.

விழிகளை மூடாது
தனித்துப் புலம்புகின்றன
கண்ணீரில்
குளித்துக் கரையேறிய
என் இமைகள்.

உன்னோடு
தொடர்ந்த பயணத்தில்
சிறகொடிந்து கிடக்கின்றன
முதுமை வரையிலும்
நீண்ட
என் கனவுகள் .

தினம் தினம்
என் கண்ணீரில்
குளிப்பவனே !
ஒரு நாளேனும்
கங்கையில் குளித்து வா!
மறு ஜென்மத்திலாவது
மனிதனாய்ப் பிறக்க .
பிறக்கும் குழந்தையின்
பாவம் போக்க. 

No comments:

Post a Comment